கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் லியோ, தனது 71-வது பிறந்தநாளை வாடிகன் நூலகத்தில் நேற்று கொண்டாடினார். இந்த நிகழ்வின்போது வாடிகன் ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டார். கொரோனா பாதிப்பு காலத்தில் வாடிகன் பணியாளர்களின் சம்பளத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த குறைப்புகள் ரத்து செய்யப்படுவதாக போப் லியோ அறிவித்தார். நிதி நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், வாடிகன் ரகசிய காப்பகம் மற்றும் நூலகத்தில் உள்ள ஆவணங்களை நகருக்கு வெளியே மாற்றுவதற்கான முந்தைய திட்டத்தையும் போப் லியோ ரத்து செய்தார். அதற்கு பதிலாக, நகருக்குள்ளேயே புதிய கட்டிடம் அமைத்து அந்த ஆவணங்களை பாதுகாக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
போப் லியோ முதன்முறையாக வாடிகன் நூலகத்துக்கு சென்று அதனை பார்வையிட்டார். அப்போது தனது பிறந்தநாளை அங்கு கொண்டாடுவது அதிர்ஷ்டம் வாய்ந்ததாக கருதுவதாக அவர் கூறினார். தனது தாய் நூலகத்தில் பணியாற்றியவர் என்பதால், இந்த நிகழ்வு தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். 15-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாக கூறப்படும் வாடிகன் நூலகத்தில் சுமார் 20 லட்சம் புத்தகங்கள் உள்ளன. மேலும், ஒரு லட்சம் தொகுப்பு ஆவணங்கள், ஆயிரக்கணக்கான நாணயங்கள், பதக்கங்கள் மற்றும் வரைபடங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.