பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த தலைவராக அண்ணா திகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏழை, எளிய மக்களின் நம்பிக்கையாக விளங்கிய அவர், தனது அறிவாற்றலால் அரசியலிலும், அன்பால் மக்களின் உள்ளங்களிலும் இடம்பிடித்ததாக தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கிய அரசியல் ஆசானாகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சராகவும் அண்ணா விளங்கியதாக டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
“கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கைகளை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட அண்ணா, பேச்சில் நயம், எழுத்தில் வலிமை, செயல்பாடுகளில் நேர்மை ஆகியவற்றை தனது சிறப்பம்சங்களாகக் கொண்டிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியலுக்கு புதிய பாதையை உருவாக்கி, மக்கள் ஆட்சியை நிலைநாட்டிய அண்ணாவின் பிறந்தநாளில், மக்கள் நலனுக்காக அவர் செய்த மகத்தான பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என்றும் டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.