ராணிப்பேட்டை: சோளிங்கர் ரோப் கார் சேவை 22 நாட்களுக்கு நிறுத்தம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் செயல்பட்டு வரும் ரோப் கார் சேவை, பராமரிப்புப் பணிகள் காரணமாக 22 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் திருத்தலத்தில், பெரிய மலையில் ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலும், சிறிய மலையில் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலும் அமைந்துள்ளன.பெரிய மலைக்குச் செல்லும் படிகள் மிகவும் செங்குத்தாக இருப்பதால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.100 கட்டணம் செலுத்தி, மலை ஏறுவதில் சிரமம் உள்ள பக்தர்கள் இந்தச் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.வழக்கமாக மாதம் ஒருமுறை பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படும் நிலையில், இந்த முறை ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 9 வரை சேவை செயல்படாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், செப்டம்பர் 10 முதல் ரோப் கார் சேவை மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும், இந்தக் காலகட்டத்தில் பக்தர்கள் படிகள் வழியாக மலைக்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.