மராட்டியம்: மருத்துவமனையில் தீ விபத்து - 3 பச்சிளம் குழந்தைகள் பலி
மராட்டிய மாநிலம் அமராவதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் 3-வது தளத்தில் குழந்தைகள் பிரிவு உள்ளது. இங்கு பிறந்த பச்சிளம் குழந்தைகள் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவக் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் 39 பச்சிளம் குழந்தைகள் இருந்த அறையில் வென்டிலேட்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு திடீரென தீப்பற்றி பயங்கரமாக பரவியது.தீ விபத்து ஏற்பட்டதும் அறைக்குள் இருந்த குழந்தைகளை மீட்க மருத்துவ ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
அவர்களின் முயற்சியால் குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும் 6 குழந்தைகள் படுகாயமடைந்தன.படுகாயமடைந்த 6 குழந்தைகளும் மேல்சிகிச்சைக்காக அருகிலுள்ள பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.