மன்னார்குடியில் சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி விற்பனை: 10 பேர் கைது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மன்னார்குடி பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மன்னார்குடி நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த முருகேசன், பரமசிவம், கதிரவன், சத்தியமூர்த்தி, கார்த்திகேயன், அருளானந்தம், ஐயப்பன், சசி ஜெஸ்டின், அன்புக்கரசு மற்றும் சுரேஷ் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 2 லேப்டாப்கள், ஒரு ஐபோன், 12 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 4 ஆட்டோக்கள், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.63 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.மன்னார்குடி நகர போலீஸ் நிலைய எல்லைக்குள் பெரிய அளவில் சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்ற நிலையில், அதைத் தடுக்கத் தவறியதாக இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.இந்த நடவடிக்கை மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.