போலீஸ் தேர்வு எழுதிய தாய்... 8 மாத குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டிய பெண் போலீசார்
கர்நாடக மாநிலத்தில் 3,991 போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.பெங்களூருவில் உள்ள சி.கே. அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா லே-அவுட் பகுதியில் அமைந்திருந்த தேர்வு மையத்திற்கு, ஒரு பெண் தனது 8 மாத குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தார். அவருடன் உதவிக்கு வேறு யாரும் வராத நிலையில், தேர்வு மையத்திற்குள் செல்லும் நேரத்தில் குழந்தை திடீரென அழ ஆரம்பித்தது.குழந்தையை அமைதிப்படுத்த தாய் முயன்றாலும் அது தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இதைக் கவனித்த சி.கே. அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியில் இருந்த மூன்று பெண் போலீசார், குழந்தையை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறினர். "நீங்கள் எந்தக் கவலையும் இல்லாமல் தேர்வு எழுதிச் செல்லுங்கள். குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று அவர்கள் உறுதியளித்தனர்.அதன்படி, குழந்தையை பெண் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு அந்த பெண் தேர்வு எழுதச் சென்றார்.
தொடர்ந்து அழுத குழந்தையை சமாதானப்படுத்த அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர், தேர்வு மைய வளாகத்திலேயே சேலையால் தொட்டில் கட்டி குழந்தையை அதில் வைத்து தாலாட்டினர். இதனால் குழந்தை அமைதியாகத் தூங்கியது.சிறிது நேரத்தில் குழந்தை விழித்தபோது, மூன்று பெண் போலீசாரும் அதைத் தூக்கி கொஞ்சி பாதுகாப்பாக கவனித்தனர். பாதுகாப்புப் பணியை மேற்கொண்டபடியே குழந்தையையும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டனர்.தேர்வை முடித்துவிட்டு திரும்பிய தாய், தனது குழந்தையை பெண் போலீசாரிடமிருந்து பெற்றுக்கொண்டு சென்றார். குழந்தையை தொட்டிலில் தாலாட்டியும், அன்புடன் பராமரித்தும் இருந்த பெண் போலீசாரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அவர்களின் மனிதநேயமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.