பனிமய மாதா பேராலயத் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு
தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு மேற்கொண்டார்.திருவிழாவை முன்னிட்டு அனைத்து துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் ஸ்ரீநாத் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவிழா நிகழ்ச்சிகளின் அட்டவணைப்படி, ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி நற்கருணை பவனியும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாதா சப்பர பவனியும் நடைபெற உள்ளன.திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்காலிக சுகாதார வளாகங்கள் அமைத்தல், கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமித்து சுத்தம் மற்றும் குளோரினேஷன் பணிகளை மேற்கொள்ளுதல், தெருவிளக்குகளை பராமரித்தல், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது., பாதுகாப்பான குடிநீர் விநியோகத்திற்காக தேவையான இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைத்தல், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து பேராலயம் வழியாக கூடுதல் உள்ளூர் பேருந்துகளை இயக்குதல், மின்தடை ஏற்படாத வகையில் பகுதி வாரியாக ஒயர்மேன்களை நியமித்து கண்காணித்தல், மருத்துவ முகாம்கள், தேவையான மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் ஆலோசிக்கப்பட்டன.பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்களை தயார் நிலையில் வைத்திருப்பது, காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் அமைப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.