தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். பணியால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சகோதரர்கள்
அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மனோஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் (55). சிறு வயதிலேயே போலியோ பாதிப்பால் மாற்றுத்திறனாளியான அவரை, சிகிச்சைக்காக 35 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் செயல்பட்டு வந்த போலியோ சிகிச்சை மையத்தில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். சீதாராமை மையத்தில் சேர்த்த ஒரு மாதத்துக்குப் பிறகு குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, அவர் ஏற்கனவே அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது. அதன் பின்னர் பல ஆண்டுகளாக குடும்பத்தினர் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், பஞ்சாபின் அமிர்தசரசில் அரசு வேலை கிடைத்த சீதாராம், அங்கேயே தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில், பஞ்சாப் மற்றும் அரியானாவில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) அண்மையில் நடைபெற்றன. இதற்காக தனது கல்விச் சான்றிதழ் தேவைப்பட்டதால், சீதாராம் மனோஹர்பூரில் தான் படித்த பள்ளிக்குச் சென்றார்.அப்போது அங்கு பணியில் இருந்த உதவி வாக்காளர் பதிவு அதிகாரி ரமேஷ் குமாரிடம், தனது மூத்த சகோதரர் பல்பீர் மனோஹர்பூரில் வசித்து வருவதாக சீதாராம் தெரிவித்தார்.