Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை மீட்பு; ஆகம விதிகளின்படி மீண்டும் பிரதிஷ்டை

திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை மீட்பு; ஆகம விதிகளின்படி மீண்டும் பிரதிஷ்டை
திருமலை–திருப்பதி மலைப்பாதையில் இருந்து திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை சம்பவம் நடந்த 14 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டது. இதையடுத்து, ஆகம விதிகளுக்கு இணங்க அந்த சிலை இருந்த அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.திருமலையில் இருந்து திருப்பதி நோக்கிச் செல்லும் முதல் மலைச்சாலையின் 7-வது மைல் பகுதியில் பெரிய ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ளது. அதன் அருகில், பல ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் தினமும் வழிபட்டு வந்த சுமார் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் செய்யப்பட்ட சிறிய ஆஞ்சநேயர் சிலை இருந்தது. இந்த சிலையை ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை திருடிச் சென்றார்.சம்பவத்தையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், ஜீப்பில் வந்த அந்த நபர் 7-வது மைல் ஆஞ்சநேயர் சிலை அருகே சில நேரம் தங்கி, பின்னர் அலிபிரி நடைபாதை தொடங்கும் பகுதி அருகே இறங்கிச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து, திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். சுப்பராயுடு உத்தரவின்படி குற்றவாளியை பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.விசாரணையின் தொடர்ச்சியாக, ஓங்கோல் ரயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிச் சென்ற நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 35 வயதான ஜஸ்வந்த்குமார் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும் மீட்கப்பட்டது. பின்னர் அவரை திருப்பதிக்கு அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலர் சி.எச். வெங்கையா சவுத்ரி, ஆகம விதிகளின்படி சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படும் என்று அறிவித்தார்.அதன்படி, நேற்று காலை 8.30 மணி முதல் 9 மணி வரை, சிலை இருந்த இடத்திலேயே புண்யாவாசனம், ஜலசம்போக்ஷணம் உள்ளிட்ட ஆகமச் சடங்குகள் நடத்தப்பட்டு, ஆஞ்சநேயர் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதுகுறித்து சி.எச். வெங்கையா சவுத்ரி கூறுகையில், நவீன தொழில்நுட்ப வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், தேவஸ்தான விழிப்புணர்வு பிரிவு பணியாளர்களின் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட காவல்துறையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் காரணமாக மிகக் குறுகிய நேரத்தில் சிலையை மீட்க முடிந்ததாக தெரிவித்தார்.மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மலைப்பாதையில் உள்ள சாலையோர சிறிய கோவில்கள் மற்றும் சிலைகளுக்கு பாதுகாப்பு கிரில்கள் அமைக்கப்படுவதுடன், உயர்தர கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளதாக கூறினார்.
Advertisement
பல ஆண்டுகளாக பக்தர்கள் பிரதிஷ்டை செய்துள்ள சாமி சிலைகளின் புனிதத்தன்மையை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் ஏதேனும் தென்பட்டால் தேவஸ்தானத்தின் கட்டணமில்லா உதவி எண் அல்லது விழிப்புணர்வு அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பணபாகா லட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வழக்கை விரைந்து விசாரித்து 14 மணி நேரத்திற்குள் சிலையை மீட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். சுப்பராயுடு மற்றும் விழிப்புணர்வு பிரிவு அதிகாரி முரளி கிருஷ்ணா பாராட்டினர்.கைது செய்யப்பட்ட ஜஸ்வந்த்குமார் பொறியியல் பட்டதாரி என்றும், தற்போது வேலை இன்றி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் அவதிப்பட்டு குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், விஜயநகரம் மாவட்டம் கோர்லமண்டலில் செயல்படும் புவனேஸ்வரி பீடம் என்ற ஆன்மிக அமைப்புடன் தொடர்பு கொண்டு அதன் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், கடந்த 5-ஆம் தேதி நண்பர்களுடன் திருமலைக்கு வந்தபோது அந்த ஆஞ்சநேயர் சிலையை பார்த்த அவர், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று வழிபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு மூன்று நாட்களுக்கு முன்பு தனியாக மீண்டும் திருமலைக்கு வந்து தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்லும் வழியில் ஜீப்பில் இருந்து இறங்கி சிலையை எடுத்துச் சென்றதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு