திட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்கும் வகையில், முதல்-அமைச்சர் விஜயின் கரூர் பயணம் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, பயணத்தில் இருந்த சட்டச் சிக்கல் நீங்கியுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை கரூருக்கு செல்லும் முதல்-அமைச்சர் விஜய், கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளையும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பயணத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் அரசு உதவிகள் வழங்குவது விசாரணையை பாதிக்காது என்றும், கருத்துச் சுதந்திரத்திற்கு முன்கூட்டியே கட்டுப்பாடு விதிக்க முடியாது என்றும் தெரிவித்தது. இதையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், கரூர் பயணம் உறுதியாகியுள்ளது.
கரூரில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அரசு நிகழ்ச்சிகளிலும் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.