தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலையில் மீண்டும் மணல் தேக்கம்; சுற்றுலா பயணிகள் சிரமம்
ராமேசுவரம் அருகிலுள்ள தனுஷ்கோடி கடற்கரை மற்றும் அரிச்சல் முனைக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டதையடுத்து, அந்தப் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் தாக்கத்தால் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுவதோடு, குறிப்பாக தென்கடல் பகுதியில் அலைகள் அதிக சீற்றத்துடன் எழுகின்றன.இதன் விளைவாக, அரிச்சல் முனை அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரை கடல் அலைகள் பலமாக மோதுகின்றன. சில நேரங்களில் அலைநீர் சாலை வரை பாய்ந்து வருகிறது. இந்த ஆபத்தான சூழலிலும், தடுப்புச் சுவர் கற்கள் மீது ஏறி நின்றபடி கடல் அலைகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் காணப்படுகின்றனர்.மேலும், பலத்த காற்றின் காரணமாக அரிச்சல் முனைக்கு செல்லும் சாலையின் பல பகுதிகளில் கடற்கரை மணல் தேங்கி சாலையை மூடியுள்ளது.
அதேசமயம், தனுஷ்கோடி பகுதியில் புழுதிக்காற்றும் தொடர்ந்து வீசி வருகிறது. சில நாட்களுக்கு முன்பும் இதேபோன்ற நிலை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.சாலையில் தேங்கியுள்ள மணலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தொடர்ந்து வீசும் பலத்த காற்றால் மீண்டும் மணல் சாலையில் படிந்து வருவதால், அந்தப் பகுதியில் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.