செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பிரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தையூரில் 15 மாடிகளை கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் 11-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென பிரிட்ஜ் வெடித்து தீப்பற்றியது. அப்போது வீட்டிற்குள் குழந்தை உட்பட 4 பேர் இருந்துள்ளனர். தீ விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டு, தீயை அணைக்க முயன்றனர். மேலும், வீட்டிற்குள் சிக்கியிருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.
Advertisement
இதற்கிடையில், தீ 13 மற்றும் 14-வது மாடிகளுக்கும் பரவத் தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுசேரி தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்ததாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.