குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தயாராகும்: இஸ்ரோ தகவல்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஏவுதளம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாகத் தயாராகும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
தற்போது ஒருங்கிணைப்பு கட்டிடம், ஏவுதள சேவை மையம், தரைவழிச் சோதனை வசதிகள் மற்றும் சிறிய செயற்கைக்கோள் ஏவுதலுக்கான தேவையான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்தளத்தில் இருந்து முதற்கட்டமாக சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ஏவுதளம் செயல்பாட்டுக்கு வந்தால்,சிறிய செயற்கைக்கோள்களை விரைவாகவும் குறைந்த செலவிலும் விண்ணில் செலுத்த இந்தியாவுக்கு கூடுதல் திறன் கிடைக்கும். மேலும், உலகளாவிய வணிக ரீதியிலான விண்வெளி சேவைகளில் இந்தியாவின் போட்டித்திறனையும் இது அதிகரிக்கும் என்று இஸ்ரோ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்