கனடாவில் காதலியை கழுத்தை நெரித்துக் கொன்றதாக இந்திய இளைஞர் கைது
பஞ்சாப் மாநிலத்தின் லுதியானா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான தமந்தீப் கவுர், கனடாவின் எட்மொண்டன் நகரில் தங்கி பணியாற்றி வந்தார். அவரும், டெல்லியைச் சேர்ந்த 22 வயதான ரிதேஷ் குமார் என்பவரும் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.கடந்த 9-ஆம் தேதி, எட்மொண்டனில் உள்ள தமந்தீப் கவுரின் வீட்டுக்கு ரிதேஷ் குமார் சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த ரிதேஷ் குமார் தமந்தீப் கவுரின் கழுத்தை நெரித்து தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த தமந்தீப் கவுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 12-ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், ரிதேஷ் குமாரை கடந்த புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.