தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில் தாய்மாமனுக்கு உள்ள சிறப்பையும், தாய்மாமன் சீர்மரபையும் போற்றும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Advertisement
இதன்படி, 2026 ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வரும் 28ஆம் தேதி இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் உமா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தனர்.