ஈரானுக்கான புதிய இந்திய தூதராக விஸ்வேஷ் நெகி நியமனம்
புதுடில்லி: ஈரானுக்கான இந்திய தூதராக வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளர் விஸ்வேஷ் நெகி நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது ஈரானில் இந்திய தூதராக பணியாற்றி வரும் ருத்ரா கவுரவ் ஷ்ரேஷ்டா, துருக்கிக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து, விஸ்வேஷ் நெகி ஈரானுக்கான புதிய இந்திய தூதராக பொறுப்பேற்க உள்ளார். அவர் விரைவில் தனது பணியை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2002-ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை (ஐஎப்எஸ்) பிரிவில் சேர்ந்த விஸ்வேஷ் நெகி, பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஓசியானா பிரிவுக்கான இந்தியாவின் இணை செயலாளராகவும், இந்தியா-பப்புவா நியூகினியா வெளியுறவு அமைச்சக ஆலோசனை குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.2022-ம் ஆண்டு முதல் வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளராக செயல்பட்டு வரும் அவர், தற்போது பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகள் மற்றும் கொள்கை சார்ந்த விவகாரங்களை கவனித்து வருகிறார். மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான அரசியல் பிரிவு இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.