ஆன்லைன் முதலீட்டு மோசடி: பெங்களூரு வாலிபர் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த வியாபாரியிடம் ஆன்லைன் முதலீட்டு மோசடி மூலம் ரூ.19 லட்சம் மோசடி செய்ததாக கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 36 வயது நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.போலீசார் தெரிவித்ததாவது: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என வாட்ஸ்ஆப் மூலம் வந்த தகவலை நம்பிய வியாபாரி, அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்புகொண்டார். ஆரம்பத்தில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்ததால் நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர் பல தவணைகளாக மொத்தம் ரூ.19 லட்சம் முதலீடு செய்தார்.அதன்பின் பணம் திரும்ப வராததுடன், தொடர்புடைய தொலைபேசி எண்ணும் செயலிழந்தது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வியாபாரி, தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் அளித்தார்.விசாரணையில், இந்த மோசடியில் பெங்களூரைச் சேர்ந்த முகேஷ் (36) என்பவர் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எச்சரிக்கை: அதிக லாபம் தருவதாக சமூக வலைதளங்கள் அல்லது வாட்ஸ்ஆப் மூலம் வரும் முதலீட்டு அழைப்புகளை நம்புவதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.