அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-27 கல்வியாண்டு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்: அமைச்சர் முகமது பர்வேஸ் பங்கேற்பு
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-27 கல்வியாண்டுக்கான பயிற்சி வகுப்புகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் இன்று தொடங்கி வைத்தார்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தமிழ்நாட்டில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 36,344 இடங்களுடனும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் 26,388 இடங்களுடனும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையங்களில் 70 பொறியியல் தொழிற்பிரிவுகள் மற்றும் 34 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.பிட்டர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், வெல்டர், கணினி உள்ளிட்ட அதிக வரவேற்பைப் பெறும் தொழிற்பிரிவுகளுடன், தொழில் 4.0-க்கு ஏற்ப மேம்பட்ட சி.என்.சி., ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்ற நவீன தொழில்நுட்பப் பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகிறது.அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் வரும் ஆகஸ்ட் 31 வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.அதன்படி, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும், மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகளையும் வழங்கினார்.கடந்த கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று முடித்த மாணவர்களில் 95 சதவீதம் பேர் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களில் 10 பேருக்கு அமைச்சர் நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற 9-வது மாநில அளவிலான படைப்புத் திறன் போட்டியில் வெற்றி பெற்ற 17 பயிற்சியாளர்களைக் கொண்ட 5 அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மேலும், 2026-ஆம் கல்வியாண்டில் 100 சதவீத மாணவர் சேர்க்கையைப் பதிவு செய்த அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசுச் செயலாளர் கொ. வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் டாக்டர் சி. பழனி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.