அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில், அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் இந்தக் கோவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்குகைக்கோவில், சிவபெருமானின் புனித தலமாக கருதப்படுகிறது.அமர்நாத் குகைக்குள் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 3-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 57 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.யாத்திரை தொடங்கியதிலிருந்து இதுவரை 4.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் குகைக்குச் சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.இந்த நிலையில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ரம்பன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோசமான வானிலை நிலவி வருவதுடன், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.