அணை பகுதியில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த குட்டி யானை, சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வனத்துறையினர் ரோந்து பணியின்போது குட்டி யானை உடல்நலக்குறைவுடன் கிடப்பதை கண்டறிந்து, உடனடியாக கால்நடை மருத்துவக் குழுவை வரவழைத்தனர். முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், குட்டி யானையை காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து, உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகே யானை உயிரிழந்ததற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் யானைக் கூட்டத்தின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.