தூத்துக்குடி மாவட்டம், புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராம அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினார்.ரெகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் தற்போது 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கு சொர்ணமாரி என்பவர் பணியாற்றி வருகிறார். மையத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுகிறது. 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோருக்கு வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்கப்படுகின்றன. மற்ற குழந்தைகளுக்கு மையத்திலேயே முட்டையை வேக வைத்து உணவுடன் சேர்த்து வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.கடந்த 20-ஆம் தேதி, ஒரு வயது குழந்தையின் பெற்றோருக்கு வழக்கம்போல் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டன.
Advertisement
அவற்றில் ஒன்றை செவ்வாய்க்கிழமை வீட்டில் வேக வைத்து உடைத்தபோது, அதன் உள்ளே இறந்த நிலையில் அழுகிய கோழிக்குஞ்சு இருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து அந்த முட்டையை அங்கன்வாடி மையத்துக்கு கொண்டு சென்று ஊழியரிடம் காட்டியதாகவும், உரிய விளக்கம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் மற்ற பெற்றோரிடமும் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா, அங்கன்வாடி மையத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரச்சினைக்குரிய முட்டையின் ஓடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அது அரசு வழங்கிய முட்டையா அல்லது வெளியில் இருந்து வாங்கப்பட்டதா என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.