வங்கதேச பிரதமரின் இந்திய பயணம் நினைவில் நிற்கும் வகையில் இருக்கவேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கு வருகை தரும்போது, அந்தப் பயணம் அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக இந்திய தூதர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தினேஷ் திரிவேதி, இந்தியா-வங்கதேசம் இடையே அண்மைக்காலமாக சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக குறிப்பிட்டார். கடந்த கால பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு, இரு நாடுகளும் எதிர்காலத்தை நோக்கி இணைந்து பயணிக்க வேண்டும் என்றார்.
இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த பரஸ்பர நம்பிக்கை அவசியம் என்றும், வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். வங்கதேச மக்களுக்கு கூடுதல் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்க விரும்புவதாகவும் கூறினார்.செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
அவர் இந்தியா வருவது தொடர்பாக இன்னும் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையில், அவரது பயணம் நினைவில் நிற்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என தினேஷ் திரிவேதி கூறினார்.மேலும், தாரிக் ரஹ்மான் இந்தியா வருகை தரும் பட்சத்தில் அவருக்கு உரிய மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையே, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியா-வங்கதேச உறவில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.