உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருமா..? பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில்
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.அவர் பேசுகையில், தி.மு.க. அரசு கொண்டுவந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்று, முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழாவும் நடத்தியதாக தெரிவித்தார். அதேநேரத்தில், தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து த.வெ.க. தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடருமா அல்லது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினார்.இதற்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்தார்.உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஏற்கனவே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழு அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.அந்த பரிந்துரைகளில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவது முதல் அம்சம் என்றும், பணிக்கொடை வழங்குவது இரண்டாவது அம்சம் என்றும் தெரிவித்தார். குடும்ப ஓய்வூதியம் தொடர்பான பரிந்துரையும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இந்த அம்சங்களை செயல்படுத்துவதற்கான விதிகளை தற்போது உருவாக்கி வருவதாகவும், அதற்கான வழிகாட்டுதல்களை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.மேலும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், வரும் நாட்களில் அதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.