மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியை எட்டியது
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளத்தின் வயநாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை (1-ம் தேதி) கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.நேற்றைய நிலவரப்படி, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டன. இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.அங்கிருந்து மேட்டூர் அணையை நோக்கி வந்த வெள்ளநீர், பாலாறு, கோட்டையூர், பண்ணவாடி, சேத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளை கடந்த பின்னர் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மேட்டூர் அணையை அடைந்தது.
அந்த நேரத்தில் அணைக்கு வினாடிக்கு 4,923 கன அடி நீர் வந்ததால், நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று இரவு நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 73.18 அடியாக பதிவாகியிருந்தது.தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் உயர்ந்துள்ளது. வினாடிக்கு 4,923 கன அடியாக இருந்த வரத்து, தற்போது 11,998 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 35.244 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.