முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளில் கரை ஒதுங்கிய 3 டன் திமிங்கலம் பத்திரமாக மீட்பு!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் பகுதியில் கரை ஒதுங்கிய சுமார் 3 டன் எடை கொண்ட பிரைடி இன திமிங்கலம், வனத்துறையினர் மற்றும் மீனவர்களின் கூட்டு முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.முத்துப்பேட்டையில் உலகப் புகழ்பெற்ற அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள லகூன் எனப்படும் ஆழம் குறைந்த கடல் பகுதியில், சுமார் 30 அடி நீளமுள்ள பிரம்மாண்ட திமிங்கலம் ஒன்று எதிர்பாராதவிதமாக கரை ஒதுங்கியது.இதனை கவனித்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து திமிங்கலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, சுமார் 3 டன் எடை கொண்ட அந்த பிரைடி இன திமிங்கலம் எந்தவித காயமும் ஏற்படாமல் பத்திரமாக மீட்கப்பட்டு ஆழ்கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், அதன் உடல்நிலை சீராகவும் ஆரோக்கியமாகவும் இருந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.