மதுப்பிரியர்களின் புகலிடமாக மாறிய மயானம் சுத்தம்: ‘வீ தி லீடர்ஸ்’ தன்னார்வலர்கள் அதிரடி
மதுரை மாவட்டம் பாப்பாக்குடியில் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி, மதுப்பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருந்த பொது மயானத்தை ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தன்னார்வலர்கள் தூய்மைப்படுத்தி மீட்டெடுத்துள்ளனர்.பாப்பாக்குடி பகுதியில் உள்ள இந்த மயான வளாகம் கடந்த சில மாதங்களாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது. புதர்கள் அடர்ந்து வளர்ந்ததுடன், அப்பகுதியில் மதுப்பிரியர்கள் நடமாட்டமும் அதிகரித்ததால், பொதுமக்கள் மயானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு, ‘சுத்தமான, வளமான தமிழகம்’ இயக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு தூய்மைப் பணிகளை ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாப்பாக்குடி மயானத்தையும் முழுமையாக சுத்தப்படுத்தும் பணியை அந்த அமைப்பினர் மேற்கொண்டனர்.இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த தூய்மைப் பணிக்கு கே.கே.
பில்டர்ஸ் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பணிகளில் ஈடுபட்டனர்.மயான வளாகத்தில் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், அடர்ந்து வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்களும் நவீன உபகரணங்களின் உதவியுடன் அகற்றப்பட்டு, மயான வளாகம் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டது.பொது மயானங்கள் உள்ளிட்ட இடங்கள் சுகாதாரமற்ற நிலையில் மாறுவதைத் தடுத்து, அவற்றை அமைதியான மற்றும் தூய்மையான சூழலாக மாற்றும் நோக்கில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மேற்கொண்டு வரும் இந்த முயற்சிக்கு மதுரை பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களிலும் இந்த பணிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.