போதைப்பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி: சென்னையில் 81 மாநகராட்சி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் இணைந்து “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற உறுதிமொழியை இன்று ஏற்றுக்கொண்டனர்.தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர்கள் ஸ்ரேயா பி. சிங் (சுகாதாரம்), செ. சரவணன் (பணிகள்) உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர்.சென்னை மாநகராட்சியின் வட்டார மற்றும் மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களும் இந்த உறுதிமொழியில் பங்கேற்றனர்.
அதேபோல், சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் 81 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.உறுதிமொழியில், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக அறிந்து, போதைப் பழக்கத்திற்கு தாம் ஆளாகாமல் இருப்பதாகவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் போதைப் பழக்கத்திற்கு செல்லாமல் தடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், போதைப் பழக்கத்தில் சிக்கியவர்களை மீட்டு அவர்களை நல்வழிப்படுத்த தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதாகவும், போதைப்பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் நுகர்வை தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருட்களை முற்றிலும் அகற்றுவதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பதுடன், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.