பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேதனை தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவருக்கு அரசு சார்பில் உயர்தர சிகிச்சை வழங்கி, அவர் விரைவில் குணமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடி விபத்துகள் ஏற்படுவது கவலை அளிப்பதாக தெரிவித்த ஜி.கே.வாசன், தினசரி வாழ்வாதாரத்துக்காக இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது உயிருக்கு எப்போது ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் வேலை செய்யும் நிலை இருக்கக்கூடாது என்றார்.தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பட்டாசு ஆலை நிர்வாகங்கள் அரசு வகுத்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், பட்டாசு ஆலைகளை தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு செய்து, அவை பாதுகாப்பு விதிகளின்படி முறையாக செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.