பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை; தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேறவில்லை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து மாநில பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார்.அவர் கூறுகையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறாதது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கே பெயர் மாற்றம் செய்து மீண்டும் அறிவித்திருப்பதாகவும், ஆட்சிப் பொறுப்பேற்று 85 நாட்கள் கடந்தும் புதிய திட்டங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.மேலும், ஆட்சியின் சாதனையாக சமூக வலைதள 'ரீல்ஸ்' மட்டுமே முன்னிறுத்தப்படுவதாகவும், தேர்தலின்போது வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார். மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது, முதியோர் உதவித்தொகையை ரூ.3,000 ஆக அதிகரிப்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார். 5 ஏக்கருக்கு குறைவான நிலம் கொண்ட விவசாயிகளின் முழு பயிர்க் கடனும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போரின் கடனில் பாதியும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலின்போது அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே முழு தள்ளுபடியும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும் கூறினார்.அதேபோல், அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், அந்தத் திட்டம் உட்பட பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.55 ஆயிரம் கோடி என்றும், நிதிப் பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடி என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலையை அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது குறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார்.முந்தைய ஆட்சியில் வருவாய் ஆதாரங்களை அதிகரிக்கும் நோக்கில் நிபுணர் குழு அமைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதுடன், ரூ.17 ஆயிரம் கோடி வருவாயும் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.வருவாய் அதிகரிக்காமல் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாது என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை மாற்றி மீண்டும் அறிவிப்பதற்குப் பதிலாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், மாநிலத்தின் கடன் சுமையை அரசு எவ்வாறு குறைக்கப் போகிறது என்பதற்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறிய அவர், வருவாயை உயர்த்த குழு அமைப்பதன் மூலம் நடைமுறையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதையும் கேள்வி எழுப்பினார்.