திருத்தணி முருகன் கோவிலில் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகை ரோஜா
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கடந்த 4-ந்தேதி ஆடி அஸ்வினியுடன் விமரிசையாக தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான ஆடிக்கிருத்திகை திருவிழா கடந்த 6-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.இந்த நிலையில், நடிகை ரோஜாவும் இன்று திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். அவர் குடும்பத்துடன் அடிக்கடி கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகிறார். குறிப்பாக, ஆடிக்கிருத்திகை நாளில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதை ரோஜா வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த 14 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.அதன்படி, இந்த ஆண்டும் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி கோவிலுக்கு காவடி எடுத்து வந்தார். பக்தி பரவசத்துடன் ‘முருகனுக்கு அரோகரா அரோகரா’ என பக்தி கோஷம் எழுப்பியபடி காவடியை சுமந்துகொண்டு கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.கோவில் நிர்வாகம் சார்பில் நடிகை ரோஜாவுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. அவர் காவடி சுமந்து வந்த காட்சிகளை கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர்.