தாகத்தில் தவிக்கும் மக்கள்: அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலை கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஏரி, குளங்கள் வறண்டு போனதுடன், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ள நிலையில், இதனை எதிர்கொள்ள அரசு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே மக்கள் குடிநீருக்காக அவதிப்படுவதற்கு முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களின் பிரச்சினைகளை அரசு கவனிக்காமல் இருப்பதாக குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், இனியாவது அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் உடனடி குடிநீர் தேவையை சமாளிக்க ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதுடன், லாரிகள் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்றும், மழைநீரை சேமிக்கும் வகையில் தேவையான இடங்களில் சிறிய தடுப்பணைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.