தமிழக சட்டசபையில் வினோதம்: விஜய் கருத்துக்கு பிரேமலதா ஆதரவு; மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு!
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்த கருத்துக்கு தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்த நிலையில், அதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.செல்லசாமி எதிர்த்துப் பேசிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியான த.வெ.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் இரு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர்.
காவிரி விவகாரம் குறித்து விஜய் பேச்சு
தமிழக சட்டசபையில் காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.காவிரி தமிழகத்தின் உயிர்நாடி மட்டுமின்றி, உணர்வுடன் தொடர்புடைய பிரச்சினையாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துடன் அணுகும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.மேலும், பெங்களூரு செல்வது குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும், பிரச்சினைக்கு தீர்வு காண சாதகமான சூழல் உருவாக வாய்ப்பு இருக்குமா என்ற எண்ணத்திலேயே தான் அங்கு செல்ல நினைத்ததாகவும் விஜய் கூறினார்.பகை நாடுகள்கூட பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும் நிலையில், அண்டை மாநிலத்துடன் பேசி தீர்வு காண முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.அந்த முயற்சியின்போது அவமானம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று சிலர் கேட்பதாகவும், அத்தகைய சூழல் வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் விஜய் கூறினார்.
விஜய் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு
இதையடுத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.செல்லசாமி, முதல்-அமைச்சர் விஜய்யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.கர்நாடகாவுக்கு சென்று தமிழக முதல்-அமைச்சர் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர், அங்கு அவமானம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கத் தயாராக இருப்பதாக விஜய் கூறியது சரியான அணுகுமுறை அல்ல என தெரிவித்தார்.
அவ்வாறு ஒரு அவமானம் ஏற்பட்டால் அது முதல்-அமைச்சருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏற்படும் அவமானமாகும் என்றும் அவர் கூறினார். விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா
தொடர்ந்து பேசிய தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவுக்குச் செல்ல விஜய் எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்.டி.கே.சிவக்குமாரும் விஜய்யும் இரு மாநிலங்களின் புதிய முதல்-அமைச்சர்கள் என்பதால், இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், முதல்-அமைச்சரின் முயற்சிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு இருப்பதாகவும் பிரேமலதா தெரிவித்தார்.கர்நாடகா செல்லும் போது விஜய்க்கு அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கேள்விகள் எழுப்பப்படுவதாகவும், அத்தகைய நிலை ஏற்படுவதை தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார். முதல்-அமைச்சர் விஜய்க்கு தலைகுனிவு ஏற்படும் சூழல் உருவானால் தமிழக மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும், ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.