ஜாதி, மத பேதமின்றி மகிழ்ச்சியுடன் ஓணம் கொண்டாடுவோம் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:பாரம்பரிய பெருமை கொண்ட திருஓணம் திருநாளை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழிக்கும் நோக்கில் திருமால் வாமன அவதாரம் எடுத்ததாகவும், மூன்றடி நிலம் கேட்ட அவர் முதல் அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் விண்ணையும் அளந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவரை பூமிக்குள் அனுப்புவதற்கு முன், மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது மக்களை சந்திக்க வரும் வரத்தை திருமால் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நினைவுகூரும் வகையில், மகாபலி மன்னனை வரவேற்கும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத திருவோண நாளில் ஓணம் கொண்டாடப்படுகிறது.ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து மலையாள மொழி பேசும் மக்கள் 10 நாட்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
வீடுகளின் முன்புறம் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் அமைத்தல், புத்தாடை அணிதல், ஓணம் விருந்து உண்பது, மோகினியாட்டம் மற்றும் கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல்வேறு வழிகளில் அவர்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கும் ஓணம் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் தனது உளமார்ந்த வாழ்த்துகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.