சர்ச்சைகளுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் மீண்டும் களமிறங்கிய கெனிஷா பிரான்சிஸ்
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான குடும்பத் தகராறு தொடர்பாக பாடகி கெனிஷா பிரான்சிஸின் பெயர் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் ரசிகர்களை சந்தித்துள்ளார்.2024-ஆம் ஆண்டு, ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியுடனான திருமண உறவை முடிவுக்கு கொண்டு வரக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.இதற்கிடையில், ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொண்டதும், இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதும் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்து கெனிஷா பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.சமூக வலைதளங்களில் தன்னை குறிவைத்து தொடர்ந்து எதிர்மறையான கருத்துகள் பதிவாகி வந்ததால் மனவேதனை அடைந்த கெனிஷா, கடந்த மே மாதம் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ள கெனிஷா, தனது சமூக வலைதளப் பயணம் மீண்டும் தொடங்கியிருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், வாழ்க்கை நம்மால் புரிந்துகொள்ள முடியாத தருணங்களிலும் சரியான பாதைக்கே நம்மை அழைத்துச் செல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது நலனை விசாரித்து செய்தி அனுப்பியவர்கள், பிரார்த்தனை செய்தவர்கள் மற்றும் அன்புடன் ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.தனக்காக வெளிப்படுத்தப்பட்ட அன்பும் ஊக்கமும் மிகுந்த ஆறுதலாக இருந்ததாகவும், இந்த சமூக வலைதளக் குடும்பம் வெறும் இணையத் தொடர்பை விட அதிகமான பாசத்தை உணர வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இனிமேல் அமைதியான மனதுடனும் தெளிவான நோக்கத்துடனும், தனக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும், புதிய தொடக்கத்தை நோக்கி முன்னேறுவோம் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.கெனிஷாவின் இந்த சமூக வலைதள மீள்வரவை அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். அவரது பதிவுக்கு பலரும் வாழ்த்துகளையும் ஆதரவான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.