கோயம்பேடு சந்தையில் வரத்து சரிவு: எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு எலுமிச்சை பழங்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், அந்த பகுதிகளில் தற்போது விளைச்சல் குறைந்திருப்பதால், மராட்டிய மாநிலத்தில் இருந்தும் எலுமிச்சை பழங்கள் வரவழைக்கப்படுகின்றன.மராட்டியத்தில் இருந்து ரெயில் மற்றும் லாரிகள் மூலம் சென்னை வந்து சேர சுமார் 4 நாட்கள் ஆகிறது. நீண்ட பயணம் காரணமாக வழியிலேயே கணிசமான அளவில் எலுமிச்சை பழங்கள் அழுகி சேதமடைவதாக கூறப்படுகிறது.கோயம்பேடு சந்தைக்கு தினசரி 150 முதல் 180 டன் வரை எலுமிச்சை பழங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 20 முதல் 30 டன் மட்டுமே வந்து சேருகிறது.
இதில் சுமார் 10 டன் அளவுக்கே தரமான பழங்கள் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஒரு கிலோ எலுமிச்சை ரூ.250 வரையிலும், ஒரு பழம் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.இதனிடையே, சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதும் எலுமிச்சை விற்பனையை பாதித்துள்ளது. விற்பனை குறைந்ததால் சந்தையில் பழங்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றில் சில அழுகி, இறுதியில் குப்பையில் கொட்டப்படும் சூழலும் உருவாகியுள்ளது.