காவிரி விவகாரம்: தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன் – முதலமைச்சர் விஜய்
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் முன்தினம் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இந்த விவாதத்தின் போது, தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கே அரசு மறுப்பு தெரிவிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், காவிரி தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதால், அதனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.காவிரி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்தது தான்தான் என்றும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
மேகதாது விவகாரத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதிலுக்கு பிறகு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி கடிதம் எழுதியதாகவும், கர்நாடகாவில் அணைகள் கட்டப்பட்ட காலத்திலேயே, குறிப்பாக 1969ஆம் ஆண்டில், இதே சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் விஜய் நினைவூட்டினார்.மேலும், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரே நோக்கத்தில்தான் பெங்களூரு சென்று கர்நாடக முதலமைச்சருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார். பகைமை கொண்ட நாடுகள்கூட பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்கின்றன என்ற நிலையில், அண்டை மாநிலத்துடன் பேசி முயற்சி செய்வதில் தவறு இல்லை என தான் கருதியதாகவும் கூறினார்.பெங்களூரு சென்றால் அவமானத்தை சந்திக்க நேரிடலாம் என்று பலரும் எச்சரித்ததாக குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், “தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அந்த அவமானத்தையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.