ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து உயர்வு; குளியல், பரிசல் சேவைக்கு 2-வது நாளாக தடை
கர்நாடக மாநிலத்தின் குடகு மலைப்பகுதியில் தோன்றும் காவிரி ஆறு, தர்மபுரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் காலங்களில், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கிய அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
இயல்பாக இந்த நேரங்களில் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வதுடன், எண்ணெய் மசாஜ் செய்து பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை ரசிப்பது வழக்கம்.ஆனால், கடந்த சில மாதங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து கடுமையாக குறைந்தது. அதே நேரத்தில் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், காவிரியில் தண்ணீர் வரத்து மேலும் சரிந்தது.இதன் விளைவாக, கடந்த ஆண்டு இதே காலத்தில் தண்ணீர் நிரம்பியிருந்த ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதி தற்போது பெரும்பாலும் வெறும் பாறைகளாக மாறியது. ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகளும் முற்றிலும் வறண்டதால், சுற்றுலாவை நம்பி வாழும் பரிசல் ஓட்டிகள் மற்றும் உணவு தயாரித்து விற்பனை செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரள மாநிலத்தின் வயநாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், கபினி அணையும் நிரம்பி வருகிறது.இதையடுத்து, கர்நாடக அரசு கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீரை திறந்துவிட்டுள்ளது. அந்த நீர் ஒகேனக்கல் வழியாக தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது ஒகேனக்கல் அருவிக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி அளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. அதேபோல், பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கத்திற்கும் தடை அமலில் உள்ளது.