என்னுடைய பணியாளர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகுவேன்: மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது முந்தைய காதல் வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டியில் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அந்த உறவில் தொடர்ந்து பய உணர்வுடன் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், முதல் படத்தின் மூலமே தமிழ் ரசிகர்களிடையேயும் கவனம் பெற்றார். தொடர்ந்து 'கொடி', 'டிராகன்', 'பைசன் காளமாடன்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அவர், தன்னுடன் பணியாற்றுபவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகுவதாக கூறினார். ஆனால், அவர்கள் தன்னைப் பார்த்து நலம் விசாரித்தால்கூட உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிடுவேனோ என்ற அச்சம் அப்போது இருந்ததாக அவர் தெரிவித்தார்.மேலும், காதல் உறவு என்பது மனநிம்மதியை அளிக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், ஆனால் தனது முந்தைய உறவில் அப்படிப்பட்ட சூழல் இல்லை என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பேசியே ஆக வேண்டும் என்ற நிலை இருந்ததால், எப்போதும் பதற்றத்துடனும் எச்சரிக்கை உணர்வுடனும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.இந்த வகையான அச்சம் ஒரு உறவின் ஆரம்பத்திலேயே தோன்றுவது ஆபத்தானது என்றும், அது மெதுவாக ஒருவரின் மனநிலையை மாற்றும் என்றும் அவர் விளக்கினார்.தன்னுடன் இருந்த நபர் மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் மனப்பான்மை கொண்டவர் என்பதை உணர்ந்த பிறகே அந்த உறவில் இருந்து விலகியதாகவும் அனுபமா தெரிவித்தார்.
தனது தனிப்பட்ட வேதனைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டதை பயன்படுத்தி, உணர்ச்சிப்பூர்வமான சார்புநிலையை உருவாக்கியதாகவும் அவர் கூறினார்.ஆரம்பத்தில் அது அக்கறையாகத் தோன்றினாலும், பின்னர் அது ஆதிக்கமாக மாறிவிட்டதாக அவர் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் தான் அணிய வேண்டிய உடையைக்கூட அந்த நபரே தீர்மானித்ததாகவும், தனக்குத் தெரியாமலேயே தனது வாழ்க்கை தொடர்பான முடிவுகளை எடுத்ததாகவும் அவர் கூறினார்.காதல் தொடங்கிய மூன்று மாதங்களிலேயே தனது குடும்பத்தினரிடம் தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபரின் குடும்பத்தினர், நிச்சயதார்த்தம் குறித்து பேசத் தொடங்கியதாகவும், அதையடுத்து நிச்சயதார்த்தத்தை ஒத்திவைத்ததாகவும் அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்தார். இருப்பினும், தனது முன்னாள் காதலரின் அடையாளத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.