ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா... உருண்டைச் சோறுடன் கிடாக்கறி விருந்து
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பாதசிறுகுடியில் பொன்னர் சங்கர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் உருண்டைச் சோறுடன் கிடாக்கறி விருந்து வழங்கப்படுவது சிறப்பம்சமாகும்.இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று நள்ளிரவு தொடங்கியது. இதில் ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய 101 ஆடுகள் சுவாமிக்கு பலியிடப்பட்டன. இதையடுத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து சுத்தம் செய்து, பெரிய அண்டாக்களில் போட்டு சமைத்தனர்.தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொன்னர் சங்கர் சுவாமிக்கு உருண்டைச் சாதம் படைக்கப்பட்டது.
பின்னர் கருவறையில் மின் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில், அந்த உருண்டைச் சாதம் வானத்தை நோக்கி எறியப்பட்டது. இது இக்கோவிலில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமாகும்.இதன் பின்னர் திருவிழாவில் பங்கேற்ற ஆண்களுக்கு இலை போட்டு உருண்டைச் சாதமும், கிடாக்கறி குழம்பும் விருந்து வழங்கப்பட்டது.நள்ளிரவில் நடைபெற்ற இந்த வித்தியாசமான திருவிழாவில் நத்தம், குட்டுபட்டி, பாதசிறுகுடி, குமரபட்டி, புதூர், குட்டூர், மாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர்.