அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு கடுமையான புதிய நடைமுறை அமல்
அமெரிக்காவில் குடியேற்றத்திற்காக விண்ணப்பிக்கும் நபர்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதியை நிரூபிக்கும் ஆதாரங்களை முழுமையாக சமர்ப்பிக்காதபட்சத்தில், அவர்களின் விண்ணப்பங்களை அதிகாரிகள் நேரடியாக நிராகரிக்கலாம் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
முன்னதாக, விண்ணப்பங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய விண்ணப்பதாரர்களுக்கு 12 வாரங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் புதிய நடைமுறையின்படி, தேவையான ஆதார ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், கூடுதல் அவகாசமோ அல்லது முன்அறிவிப்போ வழங்காமல் விண்ணப்பத்தை நிராகரிக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.முழுமையற்ற விண்ணப்பங்களை சமர்ப்பித்து, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை முறைகேடாகப் பெற சிலர் முயற்சிப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய விதிமுறை தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும், இனி புதிதாக தாக்கல் செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் பொருந்தும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.