11 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களையும், அவர்களது படகையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகில் எதிர்பாராதவிதமாக எஞ்சின் கோளாறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த ரோஹன் உள்ளிட்ட 11 மீனவர்களையும் விரைவாக இந்தியாவுக்கு அழைத்து வர தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கவும் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.அதேபோல், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் படகை அதன் உரிமையாளர் ரமேஷிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் எதிர்பாராத விதமாக கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை குற்றவாளிகளாக கருதாமல், அவர்களை பாதுகாப்பாக சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.