வெற்று வேளாண் பட்ஜெட்டாகவே இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தமிழக சட்டசபையில் 2026–27 நிதியாண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் சமர்ப்பித்தார்.
இந்த வேளாண் பட்ஜெட்டைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அந்த பதிவில், மாநிலத்தில் நிலவும் வறட்சி பிரச்சினைக்கு தீர்வு குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும், அதற்கு பதிலாக முதலமைச்சரைப் பாராட்டும் அம்சங்களே அதிகமாக இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வேளாண் பட்ஜெட் பெயர் மாற்றங்களை மட்டுமே முன்னிறுத்திய ஆவணமாக அமைந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு ‘வெற்றி’ என்ற பெயரைச் சேர்ப்பதன் மூலம் கடமை முடிந்ததாக அரசு கருதுகிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.குறுவை சாகுபடி பாதிப்பால் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பயனளிக்கும் புதிய அறிவிப்புகள் எதுவும் இதில் இல்லை என்றும், இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை வெற்று பட்ஜெட்டாகவே இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்துவார்கள் என்றும், அரசு அதற்கு உரிய பதில் அளித்து தேவையான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.