வீட்டில் புதையல் இருப்பதாக நம்பவைத்து ரூ.1.54 லட்சம் மோசடி: மாந்திரீக பூஜை செய்த இருவர் கைது
தென்காசி மாவட்டத்தில், வீட்டில் புதையல் இருப்பதாக நம்பவைத்து மாந்திரீக பூஜை நடத்தி, பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கே.டி.சி. நகரைச் சேர்ந்த 54 வயதான வேல்முருகன் மற்றும் ஆய்க்குடி அருகே விந்தன்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த 47 வயதான குமார் ஆகியோர் நண்பர்கள். தங்களுக்கு மாந்திரீக சக்தி இருப்பதாகக் கூறி பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.சில மாதங்களுக்கு முன்பு தென்காசி பகுதிக்கு வந்த அவர்கள், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை சந்தித்து, அவரது வீட்டில் புதையலும் விலை உயர்ந்த பொருட்களும் இருப்பதாக கூறியுள்ளனர். அவற்றை பெற மாந்திரீக பூஜை மற்றும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமெனவும், அதற்காக பணம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.அவர்களின் பேச்சை நம்பிய அந்த பெண், கூகுள் பே மூலம் சுமார் ரூ.1.54 லட்சம் அனுப்பியதாகவும், அதோடு ரொக்கமாகவும் பணம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அந்த வீட்டில் பல்வேறு மாந்திரீக பூஜைகளையும் அவர்கள் நடத்தியுள்ளனர்.ஆனால், புதையலை எடுத்துத் தருவதாக கூறிய விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அந்த பெண் இருவரிடமும் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு, பூஜை பாதியில் நிறுத்தப்பட்டால் குடும்பத்தில் ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டி, தொடர்ந்து நம்ப வைத்ததாக கூறப்படுகிறது.இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் தென்காசி போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வேல்முருகன் மற்றும் குமார் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.