விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கல்: விளாத்திகுளம் விவசாயிகள் முன்பதிவு செய்ய அழைப்பு*
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வனத்துறை நாற்றுப்பண்ணை மூலம் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2026–27 நிதியாண்டுக்கான 'காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம்' மற்றும் 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' ஆகிய திட்டங்களின் கீழ், விளாத்திகுளம் வனத்துறை நாற்றுப்பண்ணையில் பல்வேறு வகை மரக்கன்றுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.தேக்கு, மலைவேம்பு, மகாகனி, ஈட்டி மற்றும் வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் விளாத்திகுளம் வட்டார விவசாயிகளுக்கு எந்தக் கட்டணமும் இன்றி வழங்கப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில் முழுமையாக மரநடவு மேற்கொள்ள 250 முதல் 300 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும்.
நிலத்தின் வரப்புப் பகுதிகளில் மட்டும் நடவு செய்ய விரும்புவோருக்கு ஒரு ஏக்கருக்கு 150 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மரங்கள் குறைந்த பராமரிப்பிலேயே நன்கு வளரக்கூடியவை என்றும், எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு பொருளாதார பலன் அளிப்பதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கிய பங்களிப்பு வழங்கும் என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.மரக்கன்றுகளைப் பெற விரும்பும் விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பர் மாத இறுதியிலிருந்து மரக்கன்றுகள் வழங்கப்படும். மேலும் தகவல்கள் மற்றும் முன்பதிவுக்காக விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் அணுகுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் சுப்புலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.