மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக யாக பூஜைகள் 6-ந் தேதி தொடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் செப்டம்பர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 6-ந் தேதி தொடங்குகின்றன. விழா ஏற்பாடுகள் தொடர்பாக கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நிகழ்ச்சி விவரங்களின்படி, கும்பாபிஷேக விழா செப்டம்பர் 6-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 6 முதல் 16-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். 16-ந் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ந் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன.கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.கோவில் பகுதி குறுகலாகவும், போதிய இடவசதி இல்லாமலும் இருப்பதால், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வை காணும் வகையில் தேவையான இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.மேலும், யாகசாலை பூஜைகளின்போதும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி, மருத்துவத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்களுக்கான பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.