மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஆகஸ்ட் 18) காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 12,350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,298 கன அடியும் என மொத்தம் 12,298 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6 மணிக்கு 12,500 கன அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.அதேபோல், ஐந்தருவி, மெயின் அருவி, சினிப்பால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதித்துள்ளது.இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.இதற்கிடையில், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த 15-ந் தேதி வினாடிக்கு 4,385 கன அடியாக இருந்த நீர்வரத்து, 2 நாட்களுக்கு முன்பு 6,179 கன அடியாக அதிகரித்தது. நேற்று காலை அது மேலும் உயர்ந்து 8,555 கன அடியாக இருந்தது.நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து 2,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,350 கன அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 44.701 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.நீர்வரத்து மேலும் அதிகரித்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.