மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்: இளையராஜா வேண்டுகோள்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்: இளையராஜா வேண்டுகோள்நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்படி 2021-ம் ஆண்டில் அடுத்த கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. நாட்டில் முதல் முறையாக இந்த கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் இருந்து விவரங்களை சேகரிக்க உள்ளனர். இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 33 கேள்விகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், இசை மக்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளத்தை உருவாக்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.மேலும், 2027-ம் ஆண்டு நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) முறையில் பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை 17.07.2026 முதல் 31.07.2026 வரை [https://se.census.gov.in](https://se.census.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் (HLO) பணிகளின்போது வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.துல்லியமான மக்கள்தொகை விவரங்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.
எனவே, அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம் என்றும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.