மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 20 நாள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகையாக 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரிடம் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் மலைக்கொழுந்தன் முதல்-அமைச்சருக்கு அனுப்பிய மனுவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக அரசு ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் களப்பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் பள்ளி நேரத்தைத் தாண்டியும், விடுமுறை நாட்களிலும் நடைபெறுவதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையுடன் உடல் மற்றும் மன அழுத்தமும் ஏற்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆசிரியர்கள் கல்விப் பணிகளையும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளையும் ஒரே நேரத்தில் பொறுப்புடன் மேற்கொண்டு வருவதால், அவர்களின் சேவையை மதிக்கும் வகையில் உரிய நலச்சலுகைகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.எனவே, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு சலுகையாக 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.