'பெத்தி' படப்பிடிப்பில் காயம்: கோவையில் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடித்துள்ள **'பெத்தி'** திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்த படத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், 'மிர்சாபூர்' தொடரின் மூலம் பிரபலமான திவ்யேந்து மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விளையாட்டை மையமாகக் கொண்டு அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை சந்தித்தது.இந்நிலையில், இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்றின் படப்பிடிப்பின்போது ராம் சரணின் கையில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கை மணிக்கட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக ராம் சரண் விமானம் மூலம் கோவைக்கு வந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது தந்தையும் பிரபல நடிகருமான சிரஞ்சீவியும் வந்திருந்தார். இன்று (திங்கட்கிழமை) ராம் சரணின் கை மணிக்கட்டு பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.