பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா 90 வயதில் காலமானார். மதுரையைச் சேர்ந்த இவர், பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் தனது தனித்துவமான பேச்சாற்றலால் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியங்கள் குறித்த உரைகளாலும் பரவலாக அறியப்பட்டார். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியுள்ளார். தமிழ் மொழி மற்றும் இலக்கியத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
Advertisement
தொடர்ந்து, அவரது தமிழ் இலக்கியப் பணியை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு 2021-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. சாலமன் பாப்பையா திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பும் இடம்பெற்றுள்ளது. சாலமன் பாப்பையாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.